Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இளைஞர்களின் முதுகில் குத்தும் மிஸ்டர் கமல்ஹாசன்

 2021 சட்டமன்ற தேர்தலின் படுதோல்விக்கு பின்னர் பொள்ளாச்சி மகேந்திரன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் பதவியிலிருந்து விழகி திமுகவில்  தன்னை இணைத்து கொண்டதற்கு திரு.கமல்ஹாசன் அவர்கள் தன் மனதை கட்டுப்படுத்த தெரியாமல் கோபத்தில் அவரை துரோகி என்றும் நேர்மையில்லாதவர் என்றும் திட்டி அறிவிக்கை கொடுத்துத்திருந்தார். 

கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க தயாராக இருந்தவர்களை மகேந்திரன் தடுத்தார். இனி கட்சி பிரகாசமாக வளரும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தார். 2022 முடிவதற்குள் கட்சியை நடத்த திராணி இல்லாமல் திரு.ராகுல் காந்தியை சந்தித்து அவரை துருப்புச்சீட்டாக வைத்து திமுகவிடம் சரணடைந்து விட்டார்.  இதில், திரு.ராகுல்காந்திக்கும் கமல்ஹாசன் துரோகியாக தான் செயல்படுகிறார் என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் எளிமையாக புரிந்துவிடும்.

திமுகவை அவ்வளவு விமர்ச்சித்துவிட்டு நேரடியாக திமுக கூட்டணியில் சேர முடியாது என்பதால் தன் யுக்தியின் படி, ராகுலை மையமாக வைத்து மய்யத்தை காப்பாற்றிவிட துடிக்கிறார்.

மகேந்திரன் வெளியேறியதும் கட்சியை வளர்க்க முடியாமல் திமுகவிடம் சரணடைந்த கமல்ஹாசனா நாட்டை வழிநடத்துவார்? அந்த திறமை அவருக்கு இருக்கா என்ன?

தன் அரசியல் சுயலாபத்திற்காக சில நிர்வாகிகள் வேண்டுமானால் திமுக கூட்டணியில் இணைவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். 

பலநெடும் காலமாக ஒரு மாற்றம் வந்துவிடாதா? என்றெண்ணி உங்களை "நம்பி வாக்களித்த பல்லாயிரம் இளைஞர்களில் முதுகில் குத்துவதோடு இல்லாமல் அவர்கள் இந்த அரசியலே சாக்கடை தான் என்றெண்ணி வெறுத்து, திரும்பவும் அரசியல் பக்கம் இறங்காமல் போகும் பெரும் அபாயத்தை" துவக்கி வைத்து விட்டீர்களே மிஸ்டர் கமல்? திராவிடம் பேசி முதுகில் குத்துவதை நீங்களுமா செய்ய வேண்டும்?

இன்னமும் அதிகாரபூர்வமாக கூட்டணியில் இணையவில்லையே என்று முட்டு கொடுக்க யாரும் வராதீர்கள். ஈரோடு கிழக்கே அதற்கு அத்தாச்சி. ஏனென்றால் "சீன் பை சீன்" தான் காமிப்பார் உங்கவர்(!?)...

மகேந்திரன் செய்தது துரோகம் எனில் நீங்கள் செய்வது என்ன?

உங்களிடம் கட்சியை நடத்தும் திராணி இல்லை என்றால் கட்சியை கலைத்துவிடுங்களேன்?

 திருமாவைப்போல், வைகோவைப்போல்  ஏதோ ஒற்றை சீட்டு  பிச்சை பெற்றாலும் அதில் நீங்களோ அல்லது பெரும் பணம் கொண்ட தலைமை பொறுப்பாளர்களில் ஒரிருவரோ பதவி பிச்சை மூலம் சுகவாசியாய் மாறக்கூடும். மிஞ்சி MP, MLA சீட்டை கூட்டணியில் கிடைத்தால் அதை உண்மை தொண்டனுக்கு விட்டு கொடுத்து அவனுக்காக வாக்கு கேட்டு வர நீங்களோ உங்கள் நிர்வாகிகளோ வருவிர்களா? மாட்டீர்களே???


பதவி சுகம் உங்களுக்கு, லோக்கல்பாடி எலெக்சனில் சொற்ப சீட்டுகளில் ஒரிரு சீட்டு தொண்டனுக்கு ( அதுவும் தனி தொகுதியாக இருந்தால் மட்டும்) என்று கட்சியை எதிர்காலத்தில் கொண்டு செல்ல, கூட்டணி பலம் தேவை என்ற பொய்யை சொல்லி உங்கள் வயிறு வளர்க்கும் அளவிற்கு ஏழையோ, அல்லது புகழ் இல்லாதவரோ இல்லை நீங்கள்...

புரிந்துகொள்ளுங்கள்... 

இன்று குழந்தைகளும் கூட பிக்பாஸ் என்று செல்லம் கொஞ்சும் உலகநாயகன் திரையில் மட்டும் நடித்தால் போதும் எங்களுக்கு. 

இளைஞர்கள் அரசியலில் இறங்க வேண்டும். பணம் இல்லாதவனும் பதவிக்கு வந்து சேவையாற்ற வேண்டும். முடிந்தால் போராடுங்கள். இல்லையேல் விழகி விடுங்கள். கூத்தை திரையில் மட்டும் காட்டுங்கள். ரசிக்கிறோம்... ஆராதிக்கிறோம்.... 

இன்னமும் கனவுகளோடு சில இலட்சம் இளைஞர்கள் நாங்கள் களத்தில் நிற்கிறோம். எங்களை வஞ்சிக்காதீர்கள் மிஸ்டர் கமல்.


#தொழிற்களம்_அருணேஸ்

05/03/2023





Post a Comment

0 Comments